கருணாநிதியால் திருவள்ளவருக்கு வந்த சோதனை

தமிழ் புத்தாண்டு இத்தனை நூற்றாண்டுகளாக சித்திரை மாதம் தான் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக தமிழ் பாரம்பரியத்தை கட்டி காப்பதாக தானே பறையும் கருணாநிதி, தை மாதம் தமிழ் புத்தாண்டு என்று மாற்றி தானும் தன்னை சார்ந்தவர்களையும் கொண்டாட சொல்லி வற்புறுத்தி வருகிறார். கடந்த 2011 தேர்தலில் குடும்ப ஈடுபாடு காரணமாய் கோட்டையை விட்டு விட்டு கோபாலபுரத்திலும், ஆழ்வார்பேட்டையிலும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தன் குடும்ப உறுப்பினர்களை காத்தது போக மீதி நேரத்தில் கொஞ்சம் தமிழையும் காக்கிறார்.
திருவள்ளுவர் என்ன பாவம் செய்தார்? அவரை கேவலப்படுத்துவதற்கு ஒரு அளவு இல்லையா? திருவள்ளுவரை கருணாநிதி என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளாரா? இந்த சுவரொட்டியை பார்த்தால் அதன் அர்த்தம் உங்களுக்கு புரியும்.

அந்த சுவரொட்டியில் "தமிழ் சமுதாயமே எதிர்பார்க்கப்பட்ட தலைவர் கலைஞர் அவர்களால் உறுதி செய்யப்ப்பட்ட தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு" என்று இருக்கிறது.

தமிழ் மேல் ஆர்வம் கொண்ட எவருக்கும் இதை பார்த்தால் வருவது கோபமா? எரிச்சலா? இல்லை, ஆட்சியை இழந்து வேறு வழியில்லாமல் இது போல் தமிழ் மக்களை எள்ளி நகையாடும் இவர்களை கண்டு பச்சாதாபமா?

தமிழர்களே, நீங்களே முடிவு செய்யுங்கள்.


 

காதலர் தினமா? கலாசார சீரழிவா?

பாரத நாட்டிற்கு இது அவசியமா?

அண்டை நாடுகளின் கலாசார படையெடுப்பே இந்த வாலண்டைன் தினம். இதற்கு முன்னர் நாம் காதலித்தது இல்லையா? அன்புடன் செயல்படும் ஒவ்வொரு நாளும் காதலர் தினமே. இந்த உண்மை புரியாத அந்நிய சக்திகளின் விஷக்கலாசாரம் இன்று நம் இளம் சமுதாயத்தினரை வெகுவாக பாதித்துள்ளது.

இந்தியர்களுக்கு வெளியில் எங்கும் எதிரிகள் இல்லை. அவர்கள் இங்கே நமக்குள்ளேயே போலி கலாசார போர்வையில் ஒளிந்திருக்கிறார்கள். காதலுக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் நாம். நமக்கு எவரும் அதை கற்ப்பிக்க வேண்டியது இல்லை.

ஆண்கள் மது அருந்துவதே தவறு என்று சொல்லி கொண்டிருக்கும் வேளையில், பெண்கள் மது அருந்தி விட்டு ஆபாச நடனம் ஆடுவதை நவீன கலாசாரம் என்று தவறாக புரிந்து கொள்ள பட்டிருக்கிறது. இந்த இழி செயலை ஆதரித்து நாடெங்கும் மதவாதம் என்று கூக்குரல்கள் வேறு.

தாய்மையின் புனிதத்தை அழிக்கும் மேலை நாட்டு கலாசாரம் நமக்கு தேவையா?

நல்ல விஷயங்கள் எங்கிருந்து வந்தாலும் அதை இரு கரம் கூப்பி நம் நாடு வரவேற்கும். திரைப்படங்களும், பத்திரிகைகளும் தம் பங்கிற்கு கலாசார நாசம் செய்து கொண்டிருக்கும் வேளையில், காதலர் தினம் கொண்டாடுவது எரியும் நெருப்பில் எண்ணை இடுவதற்கு சமம்.

அந்நியர்களின் கலாசார படையெடுப்பால் நம்
~ இசை இரைச்சலாகி விட்டது
~ எதிர்காலம் ஏமாற்றமாகி விட்டது
~ மனிதாபிமானம் மட்கிப்போய் விட்டது
~ பாரம்பரியம் பகல் கனவாகி விட்டது
~ காதல் காமமாகி விட்டது
~ கலாசாரம் கண்றாவி ஆகி விட்டது

புறக்கணிப்போம் ! காதலர் தினத்தை புறக்கணிப்போம் !

இந்தியர்களே, யோசித்து பாருங்கள். நம் குழந்தைகள் அவர்கள் படிக்கும் படிப்பை விடுத்து முன் பின் தெரியாத ஒருவருடன் காமக்களியாட்டம் செய்ய முன்னோட்டம் பார்ப்பதை காதலர் தினம் என்ற பெயரிட்டு அனுமதிப்பீர்களா?

உங்கள் குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்க போகிறவர்கள்.
அவர்களை உருவாக்க வேண்டியது பெற்றோராகிய உங்கள் கடமை.

ஜெய்ஹிந்த்

மழை மழை

சிறு வயதில் மழை :
மழையில் நனைவதில் தான் எவ்வளவு சுகம்!
மழையினால் பள்ளிக்கு விடுமுறை, சிறார் பட்டாளம் ஒன்று கூடி அடிக்கும் கேளிக்கை கூத்தில் மழையின் ஓசை காணாமல் போயிருக்கும்!
ஈர மழையை ரசிக்க அம்மாவின் சூடான மூன்று மணி பஜ்ஜி!
மழை துளிகளை ஒவ்வொன்றாக எண்ணிவிடலாம் என்ற துடிப்பு!
கப்பல்களில் பல விதம் செய்து மழையில் பயணிக்கும் நினைப்பு!
கனுக்கால் நனைந்தால் நீந்த எத்தனிக்கும் உற்சாகம்!
மழை முடிந்து வானவில் வரவேற்க தயார் நிலை!

ஆஹா! என்ன அற்புதமான எண்ணங்கள் இளம் பிராயத்தில் மழையை பற்றி?இன்றும் மழை பெய்தது.
ஆனால், மனம் என்னவோ மழைச்சட்டையை தான் தேடிற்று.
நனைவதற்கு இப்பொழுதெல்லாம் விருப்பம் இருப்பதில்லை.
மழையினால் விடுமுறை என்றால் வால் பட்டாளங்களை சமாளிப்பதில் பெரும் சிக்கல். சிறார்கள் இடும் கூச்சலில் அலுவலக வேலை இடையூறு மிக அதிகம்.
மழையின் போது மட்டும் உடம்பில் இருக்கும் கொழுப்பு இறங்கிப்போகுமா என்ன எண்ணெய் பலகாரங்களை உண்பதற்கு?
மழை தண்ணீர் நனைத்த ரூபாய் நோட்டுக்கள் எண்ணிக்கையில் சேருமா என்ற கவலையே அதிகம்.
சீமைக்கு அனுப்பிய பொருட்களோ கப்பலில், பெரும் புயல் மழையால் கப்பலுக்கு என்ன ஆகுமோ என்று நினைத்தாலே. . . .
கால் சட்டை நனைவதே பெரும் எரிச்சலாக உள்ளதே இப்பொழுதெல்லாம்!மழை எப்போது முடியும்? வானவில் எப்போது வரும்?


இன்று பெய்த மழையில் நேற்றை பற்றி சிந்தித்து கொண்டிருக்கும் வேளையில் எதை பற்றியும் அறியாது என் மகள் மழையில் கத்திகப்பல் செய்து விளையாடி கொண்டு இருக்கிறாள்.

ஏனோ, மழையில் நனைய வேண்டும் என்று தோன்றுகிறது.

கல்லூரிகளின் காட்டுமிராண்டி கலாச்சாரம்

கல்லூரி மாணவர்களா? காட்டுமிராண்டிகளா?
அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் நடந்த கொலை வெறி தாக்குதல் இன்றைய கல்லூரி மாணவர்களின் கட்டுப்பாடு, கலாச்சாரம், கண்ணியம் ஆகியவற்றை கேள்விக்குறி ஆக்கிவிட்டது. சட்டம் பயிலும் மாணவர்களே இவ்வாறு சட்டத்தை கையில் எடுத்தால், இவர்கள் படித்து முடித்த பின் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்வார்கள்? வெட்கக்கேடு. ஜாதி வெறி பிடித்து அலையும் இம்மாணவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தால் தகும்? இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையானது இனி வரும் மாணவர் சமுதாயத்திற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

பள்ளியும் கல்லூரியும் பாடம் பயிலத்தானே ஒழிய பகையை வளர்க்க அல்ல என்பதை அந்த தீர்ப்பு ஆணி அடித்தார்ப்போல் பகரவேண்டும். இவை யாவுக்கும் காரணம் ஜாதி அரசியலே. மாணவர்கள் தங்கள் படிப்பு முடியும் வரை அரசியலில் ஈடுபடாமல் இருக்க சட்டம் ஏதும் கொண்டு வந்தால் அது வயிற்றையும் வாயையும் கட்டி பிள்ளைகளை படிக்க அனுப்பும் பெற்றோருக்கு நற்செய்தியாய் அமையும்.

நன்முறையை வளர்ப்பது பெற்றோர்களின் தலையாய கடமை என்பது இதிலிருந்து தெள்ள தெளிவாய் தெரிய வருகிறது. ஆசிரியர்களின் பங்கு வன்முறையை கிள்ளி எறிவதில் பன்மடங்காக தற்காலத்தில் உயர்ந்து உள்ளது. உணர்வார்களா ஆசிரியர்கள்?

காவல்துறையா? கண் தெரியா கபோதிக்கூட்டமா ?
சட்ட தேவதைக்கு தான் கண்ணில் கருப்பு துணி கட்டப்பட்டு இருக்கும். அதுவும் பாகுபாடின்றி நீதி வழங்குவதற்காக. ஆனால் இன்று அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் நடந்த மோதலை வேடிக்கை பார்த்த காவல்துறை கூட்டத்தை பார்த்த பொது அவர்கள் பார்வை குறை உள்ளவர்களோ என்ற சந்தேகமே மேலோங்கி உள்ளது. இம்மாதிரியான அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் தற்காலிக நீக்கம் செய்தும் தண்டனை வழங்கிய நீதி துறையை பார்க்கும் போது சட்டம் என்பதே கேலிக்கூத்தாக தான் தோன்றுகிறது. பொது மக்களோடு சேர்ந்து ஏதோ திரைப்படங்களில் வரும் சண்டை காட்சியை பார்ப்பது போல் பார்த்த இவர்களுக்கு வெறும் இட மாற்றமா?

தூங்கிக்கொண்டிருக்கும் நீதி தேவதையை யார் தட்டி எழுப்ப போகிறோம்? புதுப்புரட்சி செய்வதாக சொல்லும் ஏதாவது புது அரசியல்வாதியையே அனைவரும் நம்பும் நிலை உள்ளது. வருவானா ஒரு 'கல்கி' இவர்கள் கொட்டத்தை அடக்கி தர்மத்தை நிலை நாட்ட?

தமிழனா? இந்தியனா? மனிதனா?

முதலில் மனிதன், இந்தியன் பிறகு தமிழன்

தமிழன் என்ற அடையாளம் தவறாக சித்தரிக்க படுவதே இன்றைய பல குழப்பங்களுக்கு காரணம்.

நாடு இரண்டு பட்டு கிடக்கிறது. ஆதரவ இலங்கை தமிழர்களுக்கா அல்லது விடுதலை புலிகளுக்கா என்பது தான் இங்கு இப்போது தலையாய பிரச்சினையே. விடுதலை புலிகள் ஒரு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் என்பது எல்லோரும் அறிந்தது தான். இருந்தாலும் அவர்கள் பால் அளவில்லா அன்பு கொண்டோர் நம் நாட்டு அரசியல்வாதிகள். சினிமா துறையில் ஆரம்பித்து வணிகர் சங்கம் முதல் ஆதரவு கரம் நீண்டு கொண்டே போகிறது.


நல்ல விஷயம் தான். ஆனால் ஆதரவு யாருக்கு? பல காலம் முன் இலங்கையில் கால் பதித்து இன்றும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களுக்கா அல்லது அவர்கள் பெயரை சொல்லி கொண்டு பல மனித உரிமை மீறல்களை செய்து கொண்டிருக்கும் விடுதலை புலிகளுக்கா என்பது தான்.

பிராபகரன் : நல்லவரா? கெட்டவரா?

இது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கே தோன்றுகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டில் வாழும் அனைவருக்கும் எழும் கடினமான கேள்வி. நான் கூட "ஆள் என்னவோ பார்ப்பதற்கு ஜம்மென்று இருக்கிறார். நல்லவராக தான் இருக்க வேண்டும்." என்று தான் நினைத்தேன். பிறகு தான் விடுதலை புலிகளின் பல திரை மறைவு நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வர உண்மை புரிய ஆரம்பித்தது. சிறுவர்களை போரிட தயார் செய்வது எந்த நாட்டில் ஐயா மனிதாபிமானத்தின் அடையாளம்? பெண்கள், குழந்தைகள் என்று யாரையும் விட்டு வைக்க வில்லை இவர்கள். பள்ளி செல்லும் வயதில் இருந்த பச்சிளம் பாலகர்களை துப்பாக்கி தூக்க வைத்த தன்னலம் மிக்க கூட்டம் தானே இது.

மனித வெடிகுண்டு கலாச்சாரத்தை துவக்கி வைத்த பெருமை யாருக்கு? ராஜீவ் காந்தி கொடூரமான முறையில் கொல்லப்பட்டது பலருக்கு ஏன் மறந்து போனது? காங்கிரசஸ் கட்சி என்பது அடுத்தது. ராஜீவ் காந்தி என்ற உன்னதமான மனிதனை கொல்ல எவ்வாறு மனம் வந்திருக்கும்? இன்றும் தொடரும் கொடுமைகள் எத்தனையோ. ஆனால், வாங்கி தர முடிந்ததா சுதந்திரம் இவர்களால்? அஹிம்சை வழி சென்றிருந்தால் இந்நேரம் தமிழனின் சுதந்திரக்கொடி பட்டொளி வீசி பறந்திருக்குமே! எத்தனை எத்தனை உயிர்கள் பலி? அத்தனை தியாகங்களும் விரயமாக அல்லவா போய் விட்டது? விலை மதிக்க முடியாத தமிழ் உயிர்களை காலனிடமிரிந்து மீட்டு தர முடியுமா? இதற்கெல்லாம் பிராபகரன் பதில் சொல்லுவாரா?

தமிழர்களே! விழித்தெழுங்கள்!

நம் இரத்தம் தான் இலங்கை தமிழர்கள் என்பது யாவரும் அறிந்தது தான். தமிழன் என்றுமே வன்முறைக்கு துணை போனவன் அல்ல. இனியும் அது நடக்காது. உங்கள் அமைதியான ஆதரவை அப்பாவி இலங்கை தமிழர்களுக்கு அர்ப்பணியுங்கள். இன்று இங்கு உங்கள் வீட்டில் பற்ற வைக்கப்படும் ஒரு சிறு விளக்கின் ஒளியானது இருண்டு கிடக்கும் நம் சகோதரர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும்.

அரசியல் காரணங்களுக்காக தமிழ் போராளிகள் என்ற போர்வையில் திரியும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் நீங்கள் சற்று சிந்தித்து பாருங்கள். தமிழ் நாட்டு இளைஞர்களையே ஒரு காலத்தில் இலங்கைக்கு கடத்தி சென்று போரில் ஈடுபடுத்த நினைத்த விடுதலை புலிகளையா ஆதரிக்கிறோம் என்று.



தமிழர் விடுதலை நிச்சயம் ஏற்படும்.

இரத்தத்தால் அல்ல.

பல கோடி தமிழ் சகோதரர்களின் அன்பின் வெளிப்பாட்டினால் மட்டுமே.



தீபாவளி வாழ்த்துக்கள்

'பேசும் தமிழ்' வாசகர்களுக்கு எம் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபாவளி என்றதும் நினைவுக்கு வருவது பட்டாசு தான். புது ஆடைகள் உடுத்துவது, எண்ணெய் தேய்த்து குளிப்பது, பெரியோர்களிடம் ஆசி பெறுவது என்று தீபாவளி பண்டிகையின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் நம்மிடம் இன்றும் இருப்பது என்னவோ ஆச்சரிய பட வேண்டிய விஷயம் தான். கலாச்சாரம் மாறி வருகின்ற காலகட்டத்தில் எதுவுமே அதிசயமாகவே உள்ளது.

முன்பெல்லாம் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பாகவே எங்கும் களைகட்ட ஆரம்பித்து விடும். கடை வீதிகளில் கூட்டம் அலை மோதும். இன்றும் அது காணப்பட்டாலும், அன்றை காட்டிலும் குறைவே. விலை வாசி உயர்வு ஒரு காரணம் என்றாலும், அந்நிய மோகம் மற்றும் மத மாற்றம் சில காரணங்களாகவே கருதப்படுகிறது.தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லும் இந்த நேரத்தில், மத மாற்றம் செய்யும் அந்நிய சக்திகளை ஒடுக்குவோம் என்று உறுதி கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.

'இந்து' என்பது மதம் அல்ல
'இந்துத்துவம்' என்ற பெயரில் ஆறு வகையான வழிபாட்டு முறைகளை உள்ளடக்கி ஒரு பேரியக்கமாக இருந்து வந்த பண்டைய பாரம்பரியமானது, சில பல அந்நிய மத சக்திகளால் சூறையாடப்பட்டு, இன்று இந்து மக்களாலேயே மதவாதமாக பார்க்க படுகிறது. யானை தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டு கொள்ளுமாம். அது போலவே இந்து மதமானது நம் அரசியல்வாதிகளாலேயே கீழே தள்ள படுகிறது.

இந்துக்களே, இந்து மதத்தை தெரிந்து கொள்ளுங்கள்.


  • நாம் என்றும் எப்போதும் பிற நாடுகளை ஆக்கிரமித்ததில்லை.

  • மதத்தின் பெயரால் மற்றவர்களை புண்படுத்தியது இல்லை.

  • மத மாற்றம் என்ற செயலை செய்ததில்லை

  • எங்கும் எதிலும் கடவுளை பார்க்கும் உன்னதமான இயக்கத்தை சார்ந்தவர்கள் நாம்

  • இன்று வரை இந்து மதம் தோன்றிய நாடக இருந்தாலும் நேபாளம் மட்டுமே முழு இந்து நாடக இருக்கிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதத்தை சார்ந்தவர்கள் நாம். நமக்கு குடிப்பதற்கு பால் அளிக்கும் மாட்டை கூட மதித்து பண்டிகை கொண்டாடுபவர்கள் நாம். நாகரிகத்தை இந்த உலகுக்கு கற்பித்து நாமே.

'இந்து' என்று சொல்வதில் பெருமை கொள்ளுங்கள். தீபங்களின் பண்டிகை தீபாவளி நம் யாவரின் வாழ்விலும் விளக்கேற்றும்.

பேசும் தமிழ்


வர வேண்டும்
தமிழ் தமிழ் என்று முழங்கி கொண்டிருக்கும் அரசியல்வாதிகளே!

உங்களை தான் அழைக்கிறேன்.
பேர பிள்ளைகளை ஆங்கில சாறு கொடுத்து வளர்க்கும் கனவான்களே !
மத நல்லிணக்கத்தை வியாபாரமாக்கும் வியாபரிகளே !
இலக்கணம் கற்றதை தொண்டர்களுக்கு பத்திரிக்கையில் கடிதம் எழுத மட்டும் பயன்படுத்தும் கவிஞர்களே !
வர வேண்டும் !
தமிழ் பேசும் நல்லுலகுக்கு நீங்கள் வர வேண்டும் !