சிறு வயதில் மழை :
மழையில் நனைவதில் தான் எவ்வளவு சுகம்!
மழையினால் பள்ளிக்கு விடுமுறை, சிறார் பட்டாளம் ஒன்று கூடி அடிக்கும் கேளிக்கை கூத்தில் மழையின் ஓசை காணாமல் போயிருக்கும்!
ஈர மழையை ரசிக்க அம்மாவின் சூடான மூன்று மணி பஜ்ஜி!
மழை துளிகளை ஒவ்வொன்றாக எண்ணிவிடலாம் என்ற துடிப்பு!
கப்பல்களில் பல விதம் செய்து மழையில் பயணிக்கும் நினைப்பு!
கனுக்கால் நனைந்தால் நீந்த எத்தனிக்கும் உற்சாகம்!
மழை முடிந்து வானவில் வரவேற்க தயார் நிலை!
ஆஹா! என்ன அற்புதமான எண்ணங்கள் இளம் பிராயத்தில் மழையை பற்றி?இன்றும் மழை பெய்தது.
ஆனால், மனம் என்னவோ மழைச்சட்டையை தான் தேடிற்று.
நனைவதற்கு இப்பொழுதெல்லாம் விருப்பம் இருப்பதில்லை.
மழையினால் விடுமுறை என்றால் வால் பட்டாளங்களை சமாளிப்பதில் பெரும் சிக்கல். சிறார்கள் இடும் கூச்சலில் அலுவலக வேலை இடையூறு மிக அதிகம்.
மழையின் போது மட்டும் உடம்பில் இருக்கும் கொழுப்பு இறங்கிப்போகுமா என்ன எண்ணெய் பலகாரங்களை உண்பதற்கு?
மழை தண்ணீர் நனைத்த ரூபாய் நோட்டுக்கள் எண்ணிக்கையில் சேருமா என்ற கவலையே அதிகம்.
சீமைக்கு அனுப்பிய பொருட்களோ கப்பலில், பெரும் புயல் மழையால் கப்பலுக்கு என்ன ஆகுமோ என்று நினைத்தாலே. . . .
கால் சட்டை நனைவதே பெரும் எரிச்சலாக உள்ளதே இப்பொழுதெல்லாம்!மழை எப்போது முடியும்? வானவில் எப்போது வரும்?
இன்று பெய்த மழையில் நேற்றை பற்றி சிந்தித்து கொண்டிருக்கும் வேளையில் எதை பற்றியும் அறியாது என் மகள் மழையில் கத்திகப்பல் செய்து விளையாடி கொண்டு இருக்கிறாள்.
ஏனோ, மழையில் நனைய வேண்டும் என்று தோன்றுகிறது.
Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts
மழை மழை
Subscribe to:
Posts (Atom)